பழநி மலையின் படிக்கட்டுகளில் நானும் நண்பர்களும் ஏறத் தொடங்கினோம். பழநிக்கு செல்வது அதுதான் எனக்கு முதல்முறை. ஒரே கூட்டம். நாங்கள் போனபோதுதான் கூட்டமா என்றால் எப்போதுமே அப்படித்தானாம். படிகளில் ஏறிக்கொண்டே நண்பன் ஒருவனை பகடி செய்தோம். அவன் உடுமலைக்கு வருவதற்கு முன்பே இங்கே வந்து ஒரு தரிசனம் போட்டுவிட்டுதான் வந்திருக்கிறான். உடுமலையில் அவன் அதிகம் செலவு செய்யவில்லை. ஏன் என்று கேட்டபோது, தன் செருப்பை பாதுகாப்பதாகவும், சிறப்புப் பிரசாதம் தருவதாகவும் ஒரு கடையிலிருந்த தம்பதி சொல்லியிருக்கின்றனர். சொன்னார்கள் என்று சொல்வதை விட நம்ப வைத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். நண்பனும் அவர்களை 'நம்ம்ம்ம்ம்ம்பி' செருப்பை விட்டு உள்ளே சென்று தரிசனம் முடித்து வந்து செருப்பை எடுத்திருக்கிறான். அவர்கள் சொன்னபடியே பிரசாதமும் கொடுத்தனர். வாங்கிய நண்பன் எவ்வளவு என்று கேட்டுக்கொண்டே 50ரூ நோட்டை எடுத்தபோது அவர்கள் 430ரூ என்றிருக்கின்றனர். நண்பனின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இவ்வளவா என்று வாய் பிளந்து கேட்டவனுக்கு 'சாமிக்கு செய்ய கணக்குப் பாக்காதீங்க' என்று பதில் சொல்லி 430ரூபாயை வாங்கிக்கொண்டு நண்பனை ஆண்டியாக்கி விட்டனர். 'சரி, 430ரூ மதிப்புள்ள பிரசாதம் இருந்தாலாவது மனதைத் தேற்றிக் கொள்ளாலாமென்றால் உள்ளே இரண்டு விபூதிப் பொட்டலம் மட்டுமே இருந்திருக்கிறது. இந்த சம்பவத்தைச் சொல்லிதான் நாங்கள் அவனை பகடி செய்தோம். அதற்கும் அவன் மீசையில் மண் ஒட்டாதவன் போல் 'என்னிடமிருந்து சாமி இதை எடுத்துகிச்சுனா, எனக்கு வேற எதோ தரப்போகுதுனு அர்த்தம்' என்றான். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. (உபரித் தகவல்: நண்பனின் ரயில் டிக்கட்டை நாங்களே எடுத்து அவனை ஊருக்குக் கூட்டி வந்தோம்.)
இடையிடையே ஓட்டப்பந்தயம் வைத்து வேகமாக படிகளில் ஏறி எங்களுக்கு விளையாட்டு காண்பித்தனர் வேறு இரண்டு நண்பர்கள். மலை மீதும் பயங்கர கூட்டம். இருட்டி விட்டிருந்தது. விளக்கொளியில் கோவில் பளிச்சென்றிருந்தது. நீண்ண்ண்ண்ண்ட வரிசையில் பக்தர்கள் கூட்டம். நாங்களும் காத்திருந்தால் அன்றைய இரவு ரயிலைப் பிடிக்கமுடியாது என்பதறிந்தோம். வெகு நேரம் காத்திருக்க முடியாது. எனவே, கொஞ்ச நேரம் காத்திருந்து பொங்கல் வாங்கிச் சாப்பிட்டோம். அங்கேயிருந்த தண்ணீர் தொட்டியில் மாட்டியிருந்த தம்ளரை எடுத்து குழாயைத் திறந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது.....ஒரு குரங்கு. அலைபேசியில் காணொளி எடுத்தோம். குரங்குகளுக்கு அறிவில்லை என்று யார் சொன்னது?
அதை வியந்துகொண்டே, ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டே கோவிலைச் சுற்றி வந்தோம். மலை மீது ஏறியும் ஆண்டியைப் பார்க்க முடியவில்லையென்றாலும் நண்பனின் வடிவில் பார்த்து விட்டோம். முன் வாசலுக்கு வந்தோம். அங்கேதான் எதிர்பாராத ஒன்றைப் பார்த்தோம். என்னது அது? ?
- தொடரும்
0 கருத்துகள்