முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவுகளும் கலைப்புகளும் (சிறுகதை)

மு.கு: பெரியாரின் பிறந்தநாளையொட்டி கடந்த ஆண்டு 'உண்மை' பத்திரிகை நடத்திய சிறுகதை போட்டிக்கு அனுப்பிய கதை. அனுப்பி 9 மாதங்கள் ஆனபிறகும் இன்னும் முடிவுகளை அப்பத்திரிகை வெளியிடாதலால் பொறுமையிழந்து இப்போது இங்கே பதிவேற்றுகிறேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த பத்து நாட்களாக சந்திரிகா நடந்துகொள்வது அவளுடைய குடும்பத்தினர் யாருக்கும் துளியும் பிடிக்கவில்லை. அவர்களுக்கு இவள் செய்வதெல்லாம் மகா முட்டாள்தனமாகத் தெரிந்தது. சந்திரிகாவுக்குத் திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதத்தில் அவளிடம் காணாத குறையெல்லாம் இப்போது காண்கிறார்கள். முக்கியமாக அவளுடைய மாமியார். இவள் குடும்பம் நடத்தத் தகுதியில்லை என்பது மாமியாரின் எண்ணம். இந்து மத சடங்குகளெல்லாம் செய்து நடத்தி வைத்த திருமணம். திருமணம் முடிந்து ஒரு வாரத்துக்கு படு பிஸியாகப் போனது. மறுவீடு, கறி விருந்து என்பதோடு நில்லாமல் தெரிந்த உறவினர்கள் பலரும் தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தனர்.

அவள் ஒன்றும் மற்ற பெண்கள் போல் திருமணம் ஆனதும் கணவனோடு தனிக்குடித்தனம் செல்ல ஆசைப்பட்டவள் அல்ல. கூட்டு குடும்பமாக வாழ ஆசைப்பட்டவள் தான். அவளுக்கும் அவள் குடும்பத்துக்குமான பிளவின் காரணம் சுய சிந்தனைக்கும் திணிக்கப்பட்ட சிந்தனைக்குமான போராட்டம்.

சந்திரிகா எளிமையான நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவள் தந்தை கொஞ்சம் பிற்போக்குத்தனமானவர் என்றாலும் சந்திரிகாவுக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கப்பட்டது.  அவள் அதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டாள். அவளுடைய பள்ளி ஆசிரியர் ஒருவரால் பெரியாரின் மீது ஈர்ப்பு வந்து பகுத்தறிவு, பெண்ணுரிமை சார்ந்து நிறைய புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினாள். அது அவள் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணாக அவளுக்கிருந்த பல கேள்விகளை அன்றே பெரியார் கேட்டிருக்கிறார் என்பதில் அவளுக்கு ஒரு பெருமிதமும் ஆச்சர்யமும் உண்டானது. நிறைய சிந்தித்து ஆராய்ந்த பின் பல விஷயங்களில் அவளுடைய தனிப்பட்ட முடிவுகளை எடுக்கலானாள். அதில் மிக முக்கியமானது அவள் பகுத்தறிவாதியானது. அவளுக்கு இறை நம்பிக்கை அற்றுப் போயிருந்தது. 

அவள் பள்ளிப் பேச்சுப்போட்டிகளில் தவறாமல் முதல் பரிசு வாங்கியவள். அவளுடைய வாதங்கள் மிக அழகானவையாகவும் அழமான கருத்து கொண்டவையாகவும் இருக்கும்.

ஒருமுறை தன் வகுப்புத் தோழி “சந்திரிகா, உன்னுடைய பெயர் மிகவும் பழைய பெயராக இருக்கிறதே. கொஞ்சம் மாடர்னானப் பெயராக மாற்றிக் கொள்ளேன்” என்றாள்.

அதற்கு சந்திரிகா “மாடர்னிசம் என்பது பெயரில் இருந்து பயனில்லை. சிந்தனையில் இருக்க வேண்டும்.” என்று சுருக்கமாக பதிலளித்த போது அவள் தோழியால் எதுவுமே பேச முடியவில்லை.

அதுபோல் இன்னொரு தருணத்தில் ஆத்திகவாதியான அவள் ஆசிரியருக்கும் அவளுக்கும் விவாதம் எழுந்தது. இவளுடைய அறிவார்ந்த விவாதத்தால் கோபமடைந்த ஆசிரியர் “உன்னைப் போன்ற நாத்திகவாதிகளால் தான் இன்னும் இந்த...” சொல்லி முடிப்பதற்குள் சந்திரிகா “நாங்கள் நாத்திகவாதிகள் அல்ல. பகுத்தறிவாதிகள்” என்று சொல்லி தன் சிந்தனையின் தெளிவைத் தெரியப்படுத்தினாள்.

அவளுடைய வீட்டில் இந்து சடங்குகள் பலவற்றையும் கடைப்பிடிப்பார்கள். அவளுக்கோ துளியும் உடன்பாடில்லை. ‘இந்த முட்டாள்தனமான சடங்குகளை எல்லாம் ஏன் செய்கிறீர்கள்’ என்று கேட்டாள். “காரணம் இல்லாம நம்ம பெரியவங்க சொல்லமாட்டாங்க” என்று அம்மா சொல்வாள். அப்போது “காரணம் இல்லையென்று யார் சொன்னது? ஒரு காரணமும் சரியான காரணமாக இல்லையே!” என்று சொல்லி அவர்கள் வாயை அடைத்து விடுவாள்.

சந்திரிகா மிகவும் முற்போக்கானவள். கடவுள் நம்பிக்கை இல்லாதவள். இப்போது அவளைச் சூழ்ந்திருக்கும் பிரச்சனையே அவளுடைய கடவுள் நம்பிக்கை தான். பெண் பார்க்க ஆரம்பித்த போதே தன் கடவுள் நம்பிக்கை, சடங்குகள் மேல் பற்றில்லாதமை குறித்து மேலோட்டமாகச் சொன்னாள். அப்போது அவர்கள் அதை பெரிய விஷயமாகக் கொள்ளவில்லை. இது ஒரு விஷயமா என்றே நினைத்தனர். ஆனால், அப்போதே சந்திரிகாவுக்குப் பட்டது ‘திருமண வாழ்வில் சண்டைகள் வந்தால் இதனால்தான் வரும்’ என்று. அவள் நினைத்தது போலவே நடந்தது.

அவளுக்கு திருமண நிகழ்விலேயே பல சடங்குகளில் விருப்பமில்லை. ஆனாலும், தன் பெற்றோரும் கணவன் வீட்டோரும் விரும்பியதால் ஒத்துக்கொண்டாள். அவர்களை மறுதலித்தும் அவளால் செயல்பட முடியவில்லை. இப்போது அவள்தான் இருதலைப் பாம்பாக அகப்பட்டுக்கொண்டாள். தன்னுடைய சொந்த விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாமல், மற்றவர்கள் வற்புறுத்தும் சடங்குகளையும் செய்ய முடியாமல் தவிக்கிறாள்.

சந்திரிகாவுக்கு பூஜை அறைக்குச் செல்வதோ, தினமும் விளக்கேற்றுவதோ, சூடம், சாம்பிராணி கொளுத்துவதோ என்று எதையுமே செய்ய பிடிக்காது. அவள் தன் விருப்பங்களை மிக மெதுவாகத்தான் வெளிக்காட்டத் தொடங்கினாள். அவளுடைய குரல் சன்னமாக ஒலித்தது அந்த வீட்டில். அப்போதே மற்றவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு.. “குடும்பப் பொண்ணா லட்சணமா தெனைக்கும் வெளக்கேத்தி இருக்கறதில்ல? படிச்ச பொண்ணுனா புத்திசாலியா நடந்துக்கும்னு நெனச்சேன். இப்பிடி சாமியக் கும்புடாம, குடும்பத்துக்கு அடங்காம நடக்கத்தான் சொல்லிக் கொடுத்தாங்களா? ஏண்டா, உன் பொண்டாட்டிய யார்டா சொல்லித் திருத்துறது? நா எதாவது பேசுனா மாமியார் கொடுமைனு புகார் கொடுப்பீங்க. பொறந்த வீட்லயே சொல்லிக் கொடுத்துருக்கனும்” என்று அங்கலாய்ப்பார். அவள் கணவனும் அதை ஆமோதிப்பான். அந்த வார்த்தைகள் மனதைப் புண்படுத்தினாலும், அதே வார்த்தைகளால் தன் மனதை பண்படுத்திக் கொண்டாள். அவளுடைய கொள்கைகளிலும் சிந்தனைகளிலும் இன்னும் உறுதியேற்பட்டது.

தன்னுடைய நிலையிலிருந்து அவள் மாறுவதாக இல்லை. அவள் படித்தவள். வேலைக்கும் செல்பவள். மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கிறாள். அவளுடைய சம்பளத்தை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தன் விருப்பப்படி வேலை செய்ய அனுமதிக்கும் அவர்கள் தன் நம்பிக்கை, கொள்கைகளை அனுமதிக்காததை எண்ணி வருந்தினாள்.

சில நாட்களாகவே அவளுக்கு இந்த எண்ணம் இருந்துகொண்டேதானிருக்கிறது. அவளுடைய நண்பர்களும் ஊக்கப்படுத்தினர். இன்று இரவு ஒரு முடிவாக தன் மடிக்கணினியைத் திறந்து இணையத்தில் ஒரு வலைப்பூ தொடங்கினாள். அதற்கு “கனவுகளும் கலைப்புகளும்” என்று பெயரிட்டு தன் முதல் பதிவை இட்டிருந்தாள்.


 “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. பக்தி என்பது எதன் மேலும் ஏற்பட்டது இல்லை. பெண்களின் இறை நம்பிக்கைகளைக் கூட மற்றவர்களே தீர்மானிக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் மற்றவர்களுக்காக சில சடங்குகளுக்கு ஒப்புக்கொண்டேன். காரணம் பக்தி அல்ல. பயம் அல்ல. மனிதர்கள் மேல் நான் வைக்கும் மரியாதை. நான் என் விருப்பத்தை எவர் மீதும் திணித்ததில்லை. ஆனால், மற்றவர்களோ நல்லதுதான் செய்கிறோம் என்று தங்கள் விருப்பத்தைத் திணிக்கின்றனர். அவர்களுக்குத் தெரிவதில்லை திணிக்கும்போது அமிர்தம் கூட நஞ்சாகி விடும் என்பது.” - அந்தப் பதிவின் கடைசி வரிகள் இவை.

பி.கு: என்னுடைய மதிப்பீட்டில் இந்தக் கதை மிக மிக மோசமான கதை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...