வள்ளுவரின் உழவியல் பார்வை - முன்னுரை

இதுவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களிலேயே அதிக முறை ஆய்வு செய்யப்பட்ட இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும். இரண்டு கிலோ ஆண்டுகளாக ஓர் இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் அது குறள் மட்டுமே. குறளின் சிறப்பை குறள் போல் இரண்டு அடியில் சுருக்கி விட முடியாது. நான் உலகத் திருக்குறள் மையத்திலே உறுப்பினராக இருக்கிறேன். மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்கிறேன். இரண்டு முறை குறள் பற்றிச் சொற்பொழிவும் ஆற்றியிருக்கிறேன். 

பல நாட்களாகவே எனக்கு ஒரு வருத்தம் உண்டு. இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே வயதானவர்கள் (என்னைத் தவிர). ஆம். மற்ற அனைவருமே நாற்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள். பலர் அறுபது வயது காரர்கள். இளைஞர்கள் இல்லா குறளரங்கம் ஒரு வித சலிப்பையே எனக்கு ஏற்படுத்தியது. முடிந்த வரையில் என் நண்பர்களை "கட்டாயப்படுத்தி" அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆனாலும், அவர்கள் தொடர்ச்சியாக வருவதில்லை. காரணம், கூட்டங்களில் ஒரு சிறப்பு அழைப்பாளர் வந்து ஏதேனும் ஒரு தலைப்பில் நீண்ட உரையாற்றுவார். அதற்கு முன்னதாக, மைய உறுப்பினர்கள் பல நிமிடங்கள் குறள் சொல்லி, சில சமயம் தொடர்பே இல்லாத கதைகள் சொல்லி, சிலர் திருவாசகம், திருவருட்பா, பாரதி பாடல்களை ஒப்பித்துக் கூட்டத்தின் நோக்கத்தையே மாற்றுவர். சிறப்பு அழைப்பாளரின் பேச்சு கூடப் பழைய குறளை பழைய பார்வையிலேயே நோக்குவதாகவே இருக்கும். இதனால், குறள் இன்றைய தலைமுறைக்குச் சலிப்பைத் தருவதாக ஆகி விடுகிறது. 

அதுமட்டுமல்லாமல், குறளை நாம் ஒரு நீதி நூல் என்றே சொல்லி சொல்லிப் பழகி விட்டோம். அதனால், அதிலுள்ள அருமையான கவிதைகளை நம்மால் ரசிக்க முடியவில்லை. இந்த அணுகுமுறை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் ஆழமாக விமர்சனம் செய்துள்ளார். இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் நீதிக் குறள்களை அதிகமும் போதனை போன்று சொல்லி வேதனைப் படுத்துவதை விட ரசிக்கும்படியாக உள்ள கவிதைக் குறள்களைச் சொன்னால் குறள் மீது ஓர் ஈர்ப்பு வரும். பிற்பாடு, நீதி சொல்லலாம். அப்போது அது எடுபடும். இது குறளை மாற்று முறையில் அணுக வேண்டிய நேரம், அணுகி மாற்று முறையில் அதை அடுத்தத் தலைமுறையிடம் சேர்ப்பிக்க வேண்டிய நேரம். நிற்க, விட்டால், நான் குறள் பற்றி எழுதிக்கொண்டேயிருப்பேன். வள்ளலார் சொன்னது போல, 'இது விரிக்கின் பெருகும் என்பதால் இத்துடன் விடுக்கிறேன்'` 


சென்ற ஆண்டு, தமிழ்நாட்டு மாநில அளவில் நடத்தப்பட்ட திருக்குறள் ஆய்வுக் கட்டுரை போட்டிக்கு நானும் ஓர் ஆய்வுக் கட்டுரை அனுப்பினேன். கொடுமை என்னவென்றால், இன்னும் அந்தப் போட்டியின் முடிவு வெளிவரவில்லை. தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது கட்டுரையைத் தேர்வு செய்யும் நடுவர் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதால், நாளாகும் என்றனர். நானும் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருந்தேன். இன்னும் வந்தபாடில்லை. எனவே, நான் அவர்களுக்கு "வள்ளுவரின் உழவியல் பார்வை" என்ற தலைப்பில் அனுப்பிய கட்டுரையை இங்கே  வெளியிடுகிறேன். நவீன விவசாயத் தொழில்நுட்பம் பற்றி வள்ளுவர் கொண்ட பார்வையை விளக்கும் கட்டுரை. அது 15 பக்கக் கட்டுரை. உங்கள் வசதிக்காக இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளியிடுகிறேன் . படித்துப் பாருங்கள். நன்றி!!! 

கருத்துரையிடுக

0 கருத்துகள்