உலக நண்பர்களோடு நான்கு நாள்

சென்னை புத்தகத் திருவிழாவுக்கு இதுவரை நான் சென்றதில்லை. ஆனால், போகவேண்டும் என்ற ஆசை மட்டும் காதல் மிகுதியால் கசிந்துருகி பசலை நோய் வந்த சங்க காலத் தலைவி போல் எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. நம் ஊரில் இப்படி ஒன்று எப்போது நடக்கும் என்று நான் எதிர்பார்த்த ஒன்று இப்போது நடந்திருக்கிறது. ஆம். தஞ்சையில் முதன்முறையாக பெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஜூன் 12 முதல் 21 வரை. 

முதலில், இதை முன்னெடுத்து நடத்திய தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர். சுப்பையன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். திரு. சுப்பையன் பொறுப்பேற்ற பிறகு மிக முக்கியமான இரண்டு பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவை வெற்றியும் கண்டுள்ளன. ஒன்று - தஞ்சை மாவட்டம் முழுதும் 12 மணி நேரத்தில் 12 லட்சம் மரக்கன்றுகள் நட்டு அதை ஒரு கின்னஸ் சாதனைக்காக முயன்றார். என் தெருவில் கூட 12 மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன. இரண்டாவது - இத்தனை ஆண்டு காலம் இல்லாத ஒரு திருவிழாவை முதன் முறையாக நடத்தியிருக்கிறார்.   120 ஸ்டால்களில் பெரும் புத்தகக் கண்காட்சி. 

தஞ்சையின் சரஸ்வதி மகால் நூலகம் உலகப் பெயர் பெற்றது. அதனருகே, அரண்மனை வளாக மைதானத்தில் கண்காட்சி நடைபெற்றது. பத்து நாள் விழா. நாள்தோறும் ஒரு சிறப்புப் பேச்சாளரின் சொற்பொழிவு. நான் நான்கு நாட்கள் சென்று வந்தேன்.  எத்தனை எத்தனை நண்பர்கள்! அனைவரையும் கட்டித் தழுவ வேண்டும் போலிருந்தது. புத்தகங்களைத்தான் சொல்கிறேன். பணம் கொஞ்சமே இருந்ததால், புத்தகங்களும் கொஞ்சமே வாங்கினேன். இன்னும் என் வீட்டுக்கு வராத நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். 

எனக்கு மிகவும் பிடித்த இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்த அன்று சென்றேன். அவர் அமர்ந்த வரிசைக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்தேன். 50 நிமிடங்கள் புத்தகங்கள் பற்றி மிக அருமையாக உரையாற்றினார். இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் போன வருடம் வேறொரு புத்தக விழாவில் அவர் பேச்சை கேட்டிருக்கிறேன். அதில் பேசிய எந்தவொரு கருத்தையும் இங்கே அவர் மறுபடியும் சொல்லவில்லை. முற்றிலும் வேறான செய்திகள். 

இன்னொரு நாள் சென்றபோது எதிர்பாராத விதமாக விநாடி வினா போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டேன். எதிர்பாராத விதமாக ஜெயித்தும் விட்டேன்.   சங்கர சரவணன் நடத்திய அந்தப் போட்டியில் ஐந்து சுற்று. கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. நிகழ்ச்சியில் நன்றாக விளையாடியதற்காக மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். நிறைவு நாளன்று ஆட்சியர் பரிசு வழங்கினார். கவிஞர் நெல்லை ஜெயந்தா வந்திருந்தார். அவருடன் கால் மணி நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக கவிதை பற்றியும் அவரைப் பற்றியும் பேசிக் கொண்டோம். முதல் சந்திப்பு அவருடன். 

இங்கே நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியலோடு இப்பதிவை முடித்துவிடுகிறேன். 
1. சின்ன சங்கரன் கதை - மகாகவி பாரதியார்
2. ஞான ரதம் - மகாகவி பாரதியார்
3. ரோஜா - சுஜாதா
4. குருபிரசாத்தின் கடைசி தினம் - சுஜாதா
5. 6961 - சுஜாதா
6. ஓரிரவில் ஒரு ரயிலில் - சுஜாதா
7. நான் நாத்திகன் - ஏன்? - பகத்சிங்
8. இது மிஷின் யுகம் - புதுமைப்பித்தன்
9. நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - வெ. இறையன்பு
10. அயோக்கியர்களும் முட்டாள்களும் - ஞாநி
11. வில்லோடு வா நிலவே - வைரமுத்து
12. கொடிமரத்தின் வேர்கள் - வைரமுத்து
13. பகல் கனவு - ஜிஜூபாய் பதேக்கா
14. மலாலா ஓர் அறிமுகம் - ப்ரியா பாலு
15. பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்
16. சென்னை: தலைநகரின் கதை - பார்த்திபன்
17. மோகினித் தீவு - கல்கி
18. தமிழ் மண்ணில் விவேகானந்தரின் வீர முழக்கம்
19. அவளுக்காக ஒரு பாடல் - கவிஞர் கண்ணதாசன்
20. நானும் எனது நண்பர்களும் - ஜெயகாந்தன்
21. மேற்குச்சாளரம்: சில இலக்கிய நூல்கள் - ஜெயமோகன்
22. சாட்சிமொழி:சில அரசியல் குறிப்புகள் - ஜெயமோகன்
23. முன் சுவடுகள்: சில வாழ்க்கை வரலாறுகள் - ஜெயமோகன்
24. எப்போதுமிருக்கும் கதை - எஸ். ராமகிருஷ்ணன்
25. நகுலன் வீட்டில் யாருமில்லை - எஸ். ராமகிருஷ்ணன்
26. சித்திரங்களின் விசித்திரங்கள் - எஸ். ராமகிருஷ்ணன்
27. பாஷோவின் ஜென் கவிதைகள் - எஸ். ராமகிருஷ்ணன்
28. நாத்திகம் Vs ஆத்திகம் - சு. பொ. அகத்தியலிங்கம்
29. 'தின்'சைக்ளோபீடியா - என். சொக்கன்
30. மனிதகுல வரளாறு - ஏ.எஸ்.கே
31. உடல் மொழி - சிபி கே சாலமன்
32. ஆண்ட்ரூ க்ரோவ் - எஸ்.எல்.வி.மூர்த்தி
33. நவீன நோக்கில் வள்ளலார் - ப. சரவணன்
34. கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக - ராஜ் கௌதமன்
35. தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம் 
36. கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 
37. Work and its secret - Swami Vivekanandha 
38. What is real personality? - Swami Srikantandha
39. The last ticket and other stories (Collection of 10 different authors of 10 different countries)
40. Gitanjali - Rabindranath Tagore

நான்கு நாள் நண்பர்களோடு நெருக்கமாக இருந்தது மிகச் சிறந்த அனுபவம். இப்போது என் வீட்டுக்கு வந்திருக்கும் இந்த 40 நண்பர்களும் சந்தோசமாக விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்