முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஃபேஸ்புக் உலகில் தமிழ் வாழுமா? சாகுமா?


ஃபேஸ் புக் உலகில் தமிழ் - வாழுமா? சாகுமா?

     தலைப்பை படித்தவுடனே 'இது என்ன அபத்தமான கேள்வி?' என்று உங்களுக்குத் தோன்றலாம். இப்படி எழுதியவன் எவனோ அவன் விலாசம் அறிந்து விலா எலும்பை முறிக்க வேண்டும் என்றும் தோன்றலாம். தலைப்பு என்பது பூவைத் தலையில் வைக்கும் பூப் போல. பூவைப் பார்த்தே பூவையின் அழகை அறிந்துவிடமுடியாது. அதுபோலத்தான் இத்தலைப்பும்.
             உண்மையைச் சொல்லப் போனால், இந்த தலைப்பை இரண்டு தரப்பினர் ஆர்வமாகப் படிப்பர்.  "என்ன எழுதியிருக்கிறான்" என்ற ஆர்வத்தில் பார்க்கும் என் நண்பர்கள். இன்னொரு தரப்பு, 'தமிழ் அபிமானிகள்' என்று சொல்லிக் கொள்(ல்)பவர்கள். ஏதேனும் சிக்காதா என்று பூதக்கண்ணாடிக் கொண்டுத் தேடுபவர்கள். ஒரு வரி தமிழுக்கு எதிராக எழுதுவதுப் போல் தோன்றினாலே எழுதியவனை நையப் புடைப்பவர்கள். சரி, வளர்த்தது போதும், விஷயத்துக்கு வருகிறேன்.
       தமிழ் மொழி என்று தோன்றியது என்பதில் முடிவான முடிவு இன்னும் ஏற்படவில்லை. அந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. எப்போது தொன்றியதோ அது முதல் இன்று வரை தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகமயமாக்கல்,  தொழில் நுட்பப் புரட்சி, ஆங்கில மோகம், ஃபேஸ் புக் உலகம் என்று இருக்கும் இன்றைய உலகைப் பார்த்தால் வைத்த தலைப்பு கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதானோ என்று தோன்றுகிறது.
         காலம்தோறும் தமிழுக்கு பல இடர்பாடுகள் வந்துள்ளன. வடமொழியால் அமுக்கப்பட்டதும், பிற மொழிகளால் கலப்படம் செய்யப்பட்டதும் நடந்துக்கொண்டே வந்திருக்கின்றன. இருந்தும் தமிழ் தன் ஜீவனை இழக்கவில்லை. 
          ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை அடிமையாக வைத்திருந்தனர். அப்போது நாம் யாரும் அடிமையாய் இருப்பதை விரும்பவில்லை. ஆனால், இன்று நாமே விரும்பி ஆங்கிலத்துக்கு அடிமையாகி விட்டோம் என்பது வருத்தமாக இருக்கிறது. ஆங்கிலம் சிறந்த மொழி என்பதை அதை அறிந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள். நானும் ஒப்புக்கொள்கிறேன். இங்கே முரண் என்னவென்றால், தமிழ் அறிந்தோர் பலர் தமிழை நனி சிறந்த மொழி என்று ஒப்பவில்லை என்பதுதான்.
         என் நண்பன் ஒருவன் ராஜஸ்தானில் படிக்கிறான். அவனோடு ஒருமுறை பேசிய போது "இங்கே என்னுடன் தமிழ் நாட்டு மாணவர்கள் யாரும் இல்லை. ஹிந்தியும் ஆங்கிலமும்தான் பேசுகிறேன். தமிழை ரொம்ப miss பண்றேன். பாரதியார் கவிதைகள் மட்டும் தான் என்னோடு தமிழ் பேசுகின்றன" என்று மிகவும் வருந்தி சொன்னான். அங்குள்ள (அ)நாகரிகம் பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டான். "நம் தமிழ் கலாசாரத்தை தமிழ் நாட்டிலேயே எதிர்ப்பார்க்கமுடியாத போது ராஜஸ்தானிலே எப்படி எதிர்பார்க்கமுடியும்? இருந்தாலும், நம் பண்பாட்டின் மேன்மையை எடுத்து சொல்லி முடிந்தால் அவர்களை ஆங்கில கலாச்சாரத்திலிருந்து விடுவி" என்றேன். அதற்கு அவன்  "அடப் போங்க. நான் தமிழன் என்று சொன்னதற்கே வளராத காட்டுமிராண்டி கூட்டத்திலிருந்து வருபவன் போல் பார்க்கிறார்கள். இதிலே எங்கே பண்பாட்டை விளக்குவது?" என்று நொந்துக் கொண்டான். தமிழைப் பற்றி பேசுபவன் இன்று காலாவதியான மனிதன் என்று கருதப்படுகிறான். ஒரு நூற்றாண்டு முன்னால் பிறந்திருக்க வேண்டியவன் என்று சொல்லப்படுகிறான். 
            இன்று ஃபேஸ்புக் - இல் தமிழில் நிறைய பக்கங்கள் உள்ளன. இலக்கியம் பேசாவிட்டாலும் இன்றைய தமிழ் சமூகம் பற்றி நிறையவே பேசப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் பலர் இவைகளை பகிர்ந்து கொள்கின்றனர். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தன் சொந்த ஊரின் பெயரில் யாரேனும் ஒரு Group உருவாக்கியிருந்தால் அதில் இணைந்துகொள்கின்றனர். எனவே, ஏதேனும் ஒரு வகையில் தமிழ் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கிறது. இன்று ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லையற்ற எழுத்து சுதந்திரத்தைத் தந்துள்ளன. யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம், தாக்கலாம். இதனால் ஒரு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தமிழ் அபிமானிகள் சொல்கிறார்கள். அதாவது, 'நினைத்தவன் எல்லாம் தன்னை கவிஞன் என்று சொல்லிக் கொள்கிறான். எதோ கிறுக்கிவிட்டு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிறான் (என்னைப் போல). தமிழை எவ்வளவு கொச்சைப் படுத்த முடியுமோ அதை விட அதிகமாகவே கொச்சைப் படுத்துகிறான். இவர்களால் தரமில்லாத சரக்குகள் தமிழில் வந்துவிடும். அதனால், தமிழின் தூய்மை கெட்டு விடும். இனி தமிழ் எப்படி வாழும்?' என்று அவர்கள் சொல்கிறார்கள். 
           இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், இதைப் பற்றி இவ்வளவு கவலைப்படத் தேவை இல்லை. நானும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். எனக்குத் தோன்றியவை என்ன தெரியுமா? உண்மையை சொல்லப்போனால், இந்த ஃபேஸ்புக் பதிவர்கள்தான், ஃபேஸ்புக் எழுத்தாளர்கள் தான் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப் போகிறவர்கள். இவர்களால்தான் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும். தமிழ் தரமற்றுப் போய்விடும் என்று கவலைப்படுவதிலும் அர்த்தம் இல்லை. ஆயிரம் கவிதைகள் தரமற்றதாய் வந்தாலும் அவை எல்லாமே நிலைக்கப்போவதில்லை. சிறந்தவை மட்டும்தான் நிலைக்கும். "காதுக்கு இனிமையாக இல்லாத ஒசையுடைய சொற்கள் காலப்போக்கில் வழக்கொழிந்து போய் விடும். மற்றவை நிலைக்கும்" என்று தொல்காப்பியர் சொன்னது போல தரமற்ற படைப்புகளும் எழுத்துகளும் காலப்போக்கில் அழிந்து விடும். சிறந்தவை நிலைத்து நிற்கும். 
       இறுதியாக ஒன்று சொல்லி முடிக்கிறேன். இணையத்தில் இடம்பெற்ற முதல் இந்திய மொழி என்ற பெருமைக்குரியது நம் தமிழ் தான். எப்போது  தன்னை இணையத்தில் இணைத்துக்கொண்டதோ அப்போதே தமிழ் அமரத்தன்மை அடைந்துவிட்டது. தமிழும் மாறிவரும் உலகத்திற்கேற்ப தன்னை 'Upgrade' செய்து கொண்டது.    Android app -இல் நுழைந்துவிட்ட  தமிழுக்கு அழிவில்லை.
   
                         

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
nice attempt dd read this one more time with the feel of reading someones article. you will find some corrections yourself but overall it is very nice flow
Tamilyuvapriyan இவ்வாறு கூறியுள்ளார்…
tamizh vazhga

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...