முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யார் இவன்?

பரவாயில்லை...சமூக வலைத்தளங்களில் கணிசமான பகிர்வுகளும் தகவல்களும் பரிமாரப்பட்டுள்ளன. மகிழ்ச்சி.  மகாகவி பாரதியின் 133ஆம் பிறந்த நாள் பகிர்வுகளைப் பற்றிதான் குறிப்பிட்டேன்.

சமூக வலைத்தளங்களையும் செய்தித் தாள்களையும் கவனித்தேன். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பாரதிக்குக் கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் எளிது. மத்திய அமைச்சர் தருண் விஜயின் முயற்சியால் பாரதியின் பாடல்களை மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும் அவர் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் கிடைத்தக் கூடுதல் கவனம். மகிழ்ச்சியான செய்தி. இதைத்தான் பாரதியும் எதிர்பார்த்தான். தன் பாடல்கள் தீப்பெட்டியை விட மலிவாக விற்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். 

பாரதியைப் பற்றி எழுத முற்படும்போது எதை எழுதுவது என்ற தடுமாற்றம் வருகிறது. காரணம், பாரதியின் பன்முக ஆளுமை. எழுத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பாரதி முயற்சித்துள்ளான். இலக்கண விதிகளுக்கு உட்பட்டு செய்யுள்களும் இயற்றியிருக்கிறான். இலக்கணத்தை மீறி புதி விதிகளும் சமைத்திருக்கிறான். அவனுடைய பன்மொழி ஆளுமை, அறிவியல் ஆர்வம், சமகால நிகழ்வுகளின் மீது கவனம் - இதெல்லாம் அவன் கவிதைக்கு மேலும் மெறுகேற்றுகின்றன. 

பாரதியின் பாடல்கள் முழுவதையும் நான் படித்திருக்கிறேன். திரும்ப திரும்ப பாடிப் பரவசமாகியிருக்கிறேன். மோன நிலையைக் கூட அடைந்திருக்கிறேன். பாரதியின் மிக மிக மிக மிக (பாரதியின் தாக்கம்) சிறந்தப் படைப்பாக நான் கருதுவது 'குயில் பாட்டு'ம் 'வசன கவிதை'யும். ஒருமுறை படித்துப் பாருங்கள். வாசிக்கும் எல்லோருக்கும் பரவசம் ஏற்படும். பாரதியிடம் எனக்குப் பிடித்தது புதுமையை விரும்பும் போக்கு. புதிதாக செய்ய வேண்டும் என்ற தவிப்பு. இந்தத் தவிப்பு கொண்ட மகாகவிஞர்கள் சில நூற்றாண்டு இடைவெளியில் தமிழில் வந்துகொண்டுதானிருக்கின்றனர். அப்படி நான் மதிக்கும் புதுமைவிரும்பிகள் இவர்கள் - திருவள்ளுவர், ஔவையார், பாரதியார். 

பாரதியைக் கொண்டாடுவோர் ஒரு புறம். அவனைத் தூற்றுபவர் இன்னொரு புறம். நான் இரண்டு தரப்பினரின் வாதங்களையும் வாசித்திருக்கிறேன். பாரதியைக் கொண்டாடுவோர் அவருடைய பெண் விடுதலைச் சிந்தனை, விடுதலை வேட்கை, தமிழ்க் காதல், தேசியத் தலைவர்கள் பற்றிய பாடல்கள், பக்திப் பாடல்கள், ஞானப் பாடல்கள், முப்பெரும் பாடல்கள், பத்திரிகைத் திறன் பற்றி பேசுவர். எதிர்ப்பவர்கள் யாரென்று தெரிந்துகொள்ள ஆர்வப்பட்டேன். அவர்களில் முதலில் இருப்பவர்கள் திராவிடக் கழகத்தினர். அவர்கள் பாரதி ஆரியத்தைத் தூக்கிப் பிடித்தான், அவனுக்கு தமிழ் மேல் காதல் என்பது பொய், பார்ப்பனீயத்தை மறைமுகமாக பரப்பியவன், ஆர். எஸ். எஸ். இன் ஆரம்பம் அவன்தான் என்றெல்லாம் குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஏனென்றால், பாரதி பார்ப்பன வகுப்பில் பிறந்தவர். இத்தனைக்கும் கி. வீரமணி அவருடைய புத்தகங்களில் பல இடங்களில் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் பாரதி பக்தன், பாரதி பித்தன். ஆனால், எழுத்தாளர் ஜெயமோகனோ பாரதி மகாகவி இல்லவே இல்லை என்று அடித்து பேசுகிறார். எல்லாவற்றையும் படித்த பிறகு ஒன்று புரிந்தது. பாரதியை எந்த காரணத்திற்கு வேண்டுமானாலும் போற்றலாம் அல்லது தூற்றலாம். ஆனால், எந்த காரணத்திற்காகவும் புறக்கணிக்க முடியாது. அதுதான் பாரதி.

பாரதி இறந்தபோது வறுமையிலிருந்து மீள  அவர் கவிதைகளை இசையமைத்துத் தர சூரஜ் மால்  என்பவரிடம் அவருடைய குடும்பம் கொடுத்தது. அவர் மொத்தப் பாடல்களையும் சுருட்டிவிட்டார். அவரிடமிருந்து ஏ. வி. மெய்யப்ப செட்டியார் அந்தக் காலத்திலேயே 10,000 ரூபாய் கொடுத்து சூரஜ் மாலிடம் இருந்து பாரதியின் மொத்தப் பாடல்களையும் மீட்டெடுத்தார். தன்னுடைய படங்களில் பாரதியின் பாடல்களைப் பயன்படுத்தத் தொடங்கினார். பின்னர், அவரிடமிருந்து அரசுடமையாக்கப்பட்டது. அதன் பிறகே, பாரதியின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரவின. 

அதற்கு மிக முக்கியக் காரணமானவர் தோழர் ஜீவானந்தம். எங்கேயோ கேட்ட பெயர் போல இருக்கிறதல்லவா? வேறெங்குமில்லை. 'கத்தி' படத்தில் எளிய மக்களுக்காகப் போராடும் கதாபாத்திரத்திற்கு இவர் நினைவாகத்தான் ஜீவானந்தம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அவர்தான் தமிழக சட்டமன்றங்களிலும் பொதுவுடைமைக் கூட்டங்களிலும் அதிக அளவில் பாரதியின் பாடல்களைப் பாடி அதை பரவலாக்கியவர். அவருடன் எப்போதும் 'பாரதி கவிதைகள்' புத்தகம் இருக்கும். அதை ஒருமுறை வாங்கிப் பார்த்த ஒருவர் புத்தகம் முழுவதும் எல்லா வரிகளும் அடிக்கோடிற்றிருப்பதைப் பார்த்து வியந்து ஜீவாவிடம் ஏன் என்று கேட்டாராம்.  "ஒரு முறை படிக்கும் போது சில வரிகள் சிறப்பாகத் தோன்றும். அப்போது அவற்றை அடிக்கோடிடுவேன். அடுத்த முறை படிக்கும்போது வேறு சில வரிகள். இப்படியே புத்தகம் முழுதும் அடிக்கோடிட்டுவிட்டேன்" என்றாராம் ஜீவா . அஹா...எண்ணி எண்ணி வியக்கிறேன். 

பாரதியின் படைப்புகள் எண்ணற்ற பிரதிகள் கண்டுவிட்டன. பாரதிக்குப்பின் அவர் தாக்கம் இல்லாத எந்த தமிழ் கவிஞனும் இல்லை. பாரதியின் வரிகளை திரைப்படங்களுக்குத் தலைப்புகளாக வைத்தாயிற்று. (சமீபத்திய உதாரணம் - சூது கவ்வும், ஆதலால் காதல் செய்வீர்). எல்லாப் பாடகர்களும் அவர் பாடல்களைப் பாடியாயிற்று. மாறுவேடப் போட்டிகளுக்கு அவர் உருவத்தை Standard ஆக செய்தாயிற்று. சிலை வைத்தாயிற்று. பூஜை செய்தாயிற்று. இன்னும் என்ன செய்ய வேண்டும் பாரதிக்கு?

உண்மைதான். அவன் தன் கவிதைகளுக்கு அங்கீகாரத்தை எதிர்பார்த்தான். ஆனால், அதை விட பெரிதாக அவன் ஆசைப்பட்டது தன் மக்கள் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று; அவனைப் போல் உணவில்லாமல் யாரும் சாகக் கூடாது என்று;  பழம் பெருமை பேசியே பாழாகக் கூடாது என்று; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கக் கூடாது என்று; புல், புள், செடி, கொடி, விலங்கு என்று எல்லா உயிரையும் தன்னைப் போல் நினைக்க வேண்டும் என்று; வையத் தலைமை கொள்ள வேண்டும் என்று. இன்னும் எத்தனை எத்தனையோ. அவனுடைய 'புதிய ஆத்திசூடி' முழுவதுமே நமக்கான கட்டளைகள். இவற்றை நாம் முழுமையாகச் செய்திருக்கிறோமா??

பாரதி யார்?

பாரதியை மகாகவி என்று பலர் சொல்கிறார்கள். 'நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா', 'பைந்தமிழ்த் தேர்ப் பாகன்', 'பாட்டுக்கொரு புலவன்' என்று பாவேந்தர் சொல்கிறார். "இல்லை இல்லை. பாரதி  ஒரு தலைவன். அவன் கவிஞனாகவும் இருந்தான் என்பதுதான் உண்மை" என்று சுகி. சிவம் சொல்கிறார். பாரதி ஒரு சிறந்த இதழாசிரியர் என்று இதழாளர்கள் சொல்கிறார்கள். பாரதி ஒரு விஞ்ஞானி என்று அப்துல் கலாம் சொல்கிறார். அவன் வெறும் இசைப் பாடலாசிரியன் மட்டும்தான் என்று ஜெயமோகன் சொல்கிறார். விடுதலைக் கவி என்று சிலர், நூற்றாண்டுக் கவி என்று சிலர், பிரபஞ்சக் கவி என்று சிலர், பார தீ என்று சிலர். மகாக(கா)வி பாரதி என்று தி. க. வினர்.  

10 நிமிடங்களுக்கு முன்பு ஓஷோவின் புத்தகத்தில் படித்தது இது. ஓஷோ சொல்கிறார், "ஞானமடைந்தவர்கள் யோசிப்பதில்லை, அதற்கு அவசியமில்லை! வாழ்க்கை அவன் முன்னால் என்ன கொண்டு வந்தாலும், அவன் எதிர்கொள்வான்". 

ஒருவேளை, பாரதி ஞானியோ??

யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். யார் இவன்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...