முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்ளவரை வாழ வைக்காத சென்னை

இந்த வலைப்பூவில் நான் இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்றிருந்தேன். ஒன்று அரசியல் (கட்சி அரசியல்).  இரண்டு சினிமா. ஆனால், இப்போது ஒரு படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று என்னையறியாமலே என்னுள் ஒரு தூண்டுதல். என்னைக் கவர்ந்த அந்தப் படம் 'மெட்ராஸ்'. 

நூறில் தொன்னூற்று ஒன்பதே முக்கால் புள்ளி ஒன்பது ஒன்பது படங்கள் சென்னையில் நடைபெறுவதாகவே இருக்கிறது. அதைப் பார்க்கும் மக்கள் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்து இன்று வரை சென்னை என்றால் டாம்பீகமும் கம்பீரமும் கொண்ட மாநகரம் என்று நினைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே முதல் முறை சென்னைக்குப் போகும் அயலூர்வாசிக்கு அதன் மீது அதீத எதிர்ப்பார்ப்பும் நிறைய நம்பிக்கையும் கொஞ்சம் பயமும் மிரட்சியும் வந்துவிடுகிறது. (முதல் முறை போனபோது எனக்கும் இவை இருந்தன). உண்மைதான். சென்னையில் இல்லாதது எதுவும் இல்லை. ஆனால், நாம் பார்க்கும் இந்த முகம் சென்னையின் ஒரு பகுதிதான். தென் சென்னையை மட்டும் காண்பிக்கும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக முழுக்க முழுக்க வட சென்னையைக் காட்டியிருப்பதால் தான் இந்தப் படம் எனனைக் கவர்ந்தது.


படத்தின் கதையை யாரிடமாவது கேட்டால் 'செவுத்துக்காக அடிச்சுக்குற படம்' என்பார்கள் (என்னிடம் பலர் அப்படித்தான் சொன்னார்கள்). பார்த்துவிட்டு நானும் கொஞ்சம் யோசித்தேன். கதை என்று பார்த்தால் மேற்சொன்னது ஓரளவு உண்மைதான். ஆனால், இது சுவர் பற்றியது அல்ல. அதிகாரம் பற்றியது. எனக்கு எழுத்தாளர் எஸ்.ரா சொன்னது நினைவுக்கு வருகிறது. "ஒரு சினிமா என்பது கதை சொல்லும் ஊடகம் அல்ல. சினிமாவில் கதையை மட்டும் எதிர்பார்க்கக் கூடாது. அது பல விஷயங்களின் தொகுப்பு. பாடல், இசை, நடிப்பு, களம், தொழில் நுட்பம், காமெடி, ஒளிப்பதிவு என்று பலவற்றின் தொகுப்பு. இவை எல்லாமுமே ஒரு படத்தில் நன்றாக அமைய வேண்டும்" என்று அவர் சொன்னது உண்மைதான். இந்தப் படம் அப்படி ஒரு படம்.


தலித் மக்களின் வாழ்க்கையை அப்பட்டமாகப் படம் பிடித்திருக்கிறது. இரண்டரை மணி நேரம் வட சென்னை மக்களோடு வாழ்ந்தது போலவே இருந்தது. படத்தில் நடித்திருக்கும், மன்னிக்கவும். வாழ்ந்திருக்கும் எல்லா கதாபாத்திரங்களும் மனதில் தங்கிவிடுகின்றனர். ஜானி, கலையரசி, அன்பு, மாரி, மேரி, காளி என்று அனைவரும் அட்டகாசமாக நடித்திருக்கின்றனர்.  கார்த்தியின் தோற்றம் முழுதும் வடசென்னையன் போல் இல்லை என்றாலும் உடல் மொழியிலும், பேச்சிலும் வட சென்னையன் தான். கேத்ரினின் இயல்பான நடிப்பு, அளவான அழகு அருமை. பலரும் புதுமுகங்கள். ஆனால், நாம் ஏற்கனவே பழகிய மனிதர்கள் போலவே இருக்கின்றனர். 


சந்தோஷ் நாராயணனை எப்படி பாராட்டுவது. இவர்தான் இந்த மாதிரியான கதை களத்திற்குப் பொருத்தமான இசையை தரமுடியும் என்றே தோன்றுகிறது. 'எங்க ஊரு மெட்ராஸ்' - தலித்களின் வாழ்க்கையின் சுருக்கம். 'ஆகாயம் தீப்பிடிச்சா', 'நீ நான்' காதல் அனுபவம். கானா பாலாவின் 'இறந்திடவா' இரங்கற்பா. 


 சில இடங்கள் என்னைச் சிலிர்க்கச் செய்தன. தலித் மக்கள் மீது பெரும் மதிப்பும் அவர்கள் படும் துன்பங்களையும் உணர முடிந்தது. இப்படி ஒரு படத்தை நான் வெகு நாட்களாகவே எதிர்பார்த்தேன். இயக்குனர் ரஞ்சித்துக்கு மிகப்பெரிய சலாம். 

"ரிப்பன் பில்டிங் ஹை கோர்ட்டுல செங்கல் மணல் மட்டுமில்ல 
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்குடா", "போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு கூட்டம் கூட்டி ஓட்டு போட்டும் ஏமாற்றமே எங்க பண்பாடு தான்" என்ற கபிலனின் வரிகள் என்னை பாதித்தன. இந்த சமூகத்தை சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. 

மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றி பல ஆண்டுகள் ஆனாலும் வட இந்தியா வாசிகள் இன்னமும் தமிழர்களை மதராஸிஸ் என்றுதான் சொல்கிறார்கள். வட இந்திய மக்களால் நாம் எப்படி ஒதுக்கப்படுகிறமோ அப்படி தென் சென்னை வாசிகளால் ஒதுக்கப்படுபவர்கள்தான் வட சென்னையர். 

வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தென் சென்னையை மையமாக வைத்தே தீட்டப்படுகின்றன. வட சென்னை இன்னமும் வளராத சென்னையாகவே இருக்கிறது. மாட மாளிகைகளும், சிறந்த மருத்துவமனைகளும், இ.ஏ (EA) களும், ஸ்பென்சர்களும், கல்லூரிகளும், மைதானங்களும் தென் சென்னையில் தான் உள்ளன. சினிமாக்காரர்களின் வீடுகளும், அரசியல்வாதிகளின் வீடுகளும் தென் சென்னையில்தான். இவ்வளவும் இங்கே இருக்கின்றன.

வட சென்னையிலும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் உள்ளனவே என்று நீங்கள் நினைக்கலாம். இதிலும்  ஓர் அரசியல் இருக்கிறது. வட சென்னையில் வசிப்பவர்கள் (வாழ்பவர்கள் என்று சொல்லமுடியாது) பெரும்பாலும் தலித்கள். தொழிற்சாலைகளின் கழிவுகள் வட சென்னைவாசிகளையே பாதிக்கின்றன. உயிரிழப்பு அங்கேதான் அதிகம். ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக வைக்கப்படுவது போல்தான் இது. இயந்திரங்களுக்கு இரை இவர்கள்தான். ஐ.டி. கம்பெனிகள் எதுவும் வட சென்னையில் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே இவர்களின் நினைவு அரசியல்வாதிகளுக்கு வருகிறது. 

அரசியல் பேசும் வசனங்களும் இப்படத்தில் உள்ளன. அதிகார அரசியல்வாதிக்கு எதிராக ஒரு தலித் குரல் கொடுக்கும் போது "உங்கள உசுப்பி விட்டவன் யாருன்னு தெரியும்" என்று அந்த அரசியல்வாதி சொல்லும் வசனம் உண்மை நிலை. தலித் மக்கள் வாய் திறந்தாலே சமூகம் இப்படித்தான் பேசுகிறது. "பெரிய கலவரமாச்சு. ஆனா போலிஸ் ஹவுசிங் போர்டு ஆளுங்களத்தான் புச்சிகினு போனாங்க" என்று ஆரம்பத்திலேயே  அரசியல் பேசுகிறது. இறுதியில், பள்ளி பிள்ளைகளுக்கு அரசியல் சொல்லித் தருவது போல் முடித்திருப்பது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது. சினிமேட்டிகலாக இருக்கிறது. ஆனால், அதுவும் ஒரு தீர்வை முன்வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். 

இந்தப் படம் தலித் அரசியலைப் பேசும் படம் என்கிறார்கள். எனக்கென்னவோ இன்னும் கொஞ்சம் அரசியல் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது. முதல் பாதியில் பேசும் அரசியல் இரண்டாம் பாதியில் தனி நபர் பழி வாங்குதல் போல மாறிவிடுகிறது. ஆனாலும், மெய்யாகச் சொல்கிறேன். இந்தப் படம் மிகச் சிறந்த படம். ரஞ்சித்துக்கு மீண்டும் பாராட்டுகள். 




 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' என்கிறார்கள். ஆனால், மெட்ராஸின் அட்ரஸாக இருக்கும், பூர்வ குடிகளான தலித் மக்களை எப்போது வாழ வைக்கப் போகிறது, இந்த சென்னை ????

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...