ஒற்றை வரி விமர்சனம்

பிரபு காளிதாஸ் அவர்கள் முன்பு ஒருமுறை தன்னுடைய முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் தொலைக்காட்சியில் கதை சொல்வதாகவும் அதைப் பார்த்ததும் தனக்குச் சிரிப்பு வந்ததாகவும் சொல்லியிருந்தார். விளம்பர வெளிச்சத்துக்காக அவர் இப்படிச் செய்திருக்கலாம் என்றும் குறிப்பிடிருந்தார். அந்தப் பதிவிற்கு ஆதரவான கருத்துகள் பெரும்பாலும் இல்லை, ஒன்றிரண்டைத் தவிர. ஒன்றுமே தெரியாமல் பலர் நிகழ்ச்சி நடத்தும்போது இறையன்பு போன்ற விஷயம் தெரிந்தவர்கள் பேசுவதில் தவறில்லை என்றே பலரும் சொல்லியிருந்தனர். பின்னூட்டங்களிலும் சில கருத்துக்களை பிரபு காளிதாஸ் சொல்லியிருந்தார்.

அவருடைய கருத்துக்கள் இவை:
1. கதை சொல்வதற்காக ஒருவர் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமா?
2. அவர் இறங்கி அடிக்க வேண்டிய களங்கள் நிறைய இருக்கின்றனவே? அதை விட்டு ஏன் கதை சொல்கிறார்?
3. சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்வதை விட்டுவிட்டு இவரே உட்கார்ந்து புத்தகம் எழுதுவது சரியா?
4. தானும் தொலைக்காட்சியில் வருகிறோம் என்ற அற்ப ஆசைக்காக கூட அவர் கதை சொல்ல ஒத்துக்கொண்டிருக்கலாம்.
5. கதை சொல்ல ஒப்புக்கொண்டிருக்கும் இறையன்பு விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்வருவாரா?
இக்கருத்துக்களுக்கான என்னுடைய எதிர்வினைகள் கீழே:

1. கதை சொல்வதற்காக ஒருவர் ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டியதில்லைதான். ஆனால், ஐ.ஏ.எஸ் படித்த ஒருவர் கதை சொல்வது குற்றமா என்ன? ஒரு ஐ.ஏ.எஸ் கதையும் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கதை சொல்வதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? நன்றாக கதை சொல்லும் திறனும் கதையும் தெரிந்தால் போதாதா? உலகமே கதை சொல்லாமல் நகர்கிறதா? நம் நாட்டிலும் நாற்று நடுபவர்கள் முதல் நாட்டை ஆள்பவர்கள் வரை எல்லோரும் கதைச் சொல்லிக்கொண்டுத்தானே இருக்கின்றார்கள்? கதைதான் சொல்லப்போகிறோம் என்றால் யாராவது ஐ.ஏ.எஸ் படிப்பார்களா என்ன?

2. அவர் இறங்கி அடித்த களங்கள் நிறைய இருக்கின்றன. அவர் பணி வரலாற்றைப் பார்த்தால் அது தெரியும். அவர் பணிபுரிந்த மாவட்டங்களில் என்னென்ன புதுமைகள் செய்தார், எவ்வளவு நேர்மையாக இருந்தார், என்னென்ன சாதித்தார் என்று புரியும். நிலவொளிப் பள்ளி, கடலூரில் மீனவக் குடும்பளுக்காகச் செய்தவை, சுற்றுலாத் துறையில் இருந்தபோது செய்த சாதனைகள் என இப்பட்டியல் நீளும்.. இப்போதும் அவர் தயாராகவே இருக்கிறார். ஆனால், அரசு அவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் 'தூக்கி அடிப்பதிலேயே' குறியாக இருக்கிறது.

3. அவர் எத்தனையோ சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்திருக்கிறார். அவர் அறிமுகம் செய்து நான் படித்த புத்தகங்கள் அனேகம். மேலும், அவர் புத்தகம் எழுதக்கூடாது என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா? அதுமட்டுமல்ல. அவர் தொலைக்காட்சியில் பேசுவதாலும் புத்தகம் எழுதுவதாலும் தன்னுடைய பணியில் சிறப்பாகப் பணியாற்றவில்லை என்ற சொல்ல ஆதாரம் எதுவும் இல்லையே? அதோடு, இறையன்புவின் பெரும்பான்மையான புத்தகங்களைப் படித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். அவருடைய சில புத்தகங்களைப் படித்தால் பல புத்தகங்களைப் படித்த அளவுக்கான செய்திகள் இருக்கும். குறிப்பாக, பத்தாயிரம் மைல் பயணம், இலக்கியத்தில் மேலாண்மை, வையத் தலைமை கொள், போர்த் தொழில் பழகு, Ancient Yet Modern, Random Thoughts போன்ற புத்தகங்கள். இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலில் அவர் கிட்டத்தட்ட 300 புத்தகங்களை ஆராய்ந்திருக்கிறார். ஒவ்வொரு புத்தகம் பற்றிய சிறு குறிப்பும் கொடுத்து அறிமுகம் செய்கிறார். எனவே, அவர் புத்தகங்களை அறிமுகம் செய்வதில்லை என்பது தவறு.

4. தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக அவர் இதைச் செய்கிறார் என்பது அவதூறு அல்லாமல் வேறொன்றுமில்லை. அப்படி வந்துதான் அவர் பிரபலமாக வேண்டும் என்றில்லை. மேலும், இறையன்பு வெறும் கதைகளைச் சொல்லிச் செல்பவர் அல்லர். முடிந்தவரை இளைஞர்களை முன்னேற்ற தன்னாலான உத்வேகத்தைக் கொடுத்து வருகிறார். அவரால் தாக்கம் பெற்று முன்னேறிய இளைஞர்கள் பலர். அவரைக் கொண்டு தொலைக்காட்சிகள் பிரபலமடைய முயல்கின்றன என்று சொன்னால் கூட அது பொருந்தும்.

5. இறுதியாக, விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் தயாரா இல்லையா என்று தெரியாது. ஆனால், அவ்வாறு செய்வது அரசுப்பணிக்கு புறம்பானது. காரணம், தற்போது தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள் அரசியல் தொடர்பாகவையே பெரும்பாலும் இருக்கின்றன. ஒரு அரசு அதிகாரி அரசைப் பற்றிக் கருத்து சொல்லக்கூடாது. ஏற்கெனவே, காவல்துறை பற்றி சகாயம் ஐ.ஏ.எஸ். கருத்துச் சொல்லி அது பெரும் சர்ச்சையானது. இன்னொன்று, இவற்றை விவாத நிகழ்ச்சிகள் என்று சொல்வது தவறு. இவை விதண்டாவாத நிகழ்ச்சிகள். தொ.காட்சியில் கதை சொல்வதே விளம்பரத்துக்காக என்று முதலில் சொன்ன பிரபு காளிதாஸ் பின்னர் விவாதங்களில் மட்டும் பங்குபெற அழைப்பது எப்படி? அதுவும் விளம்பரம் ஆகிவிடாதா?

இது இறையன்புவுக்கு 'ஜல்லி' அடிக்கும் பதிவல்ல. எனக்கும் அவரிடம் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன, விமர்சனங்களும் உண்டு. ஆனால், பிரபு காளிதாஸ் போல அவரைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் (அவர் ஐ.ஏ.எஸ் என்பதைத் தவிர) ஒற்றை வரியில் விமர்சனம் என்ற பெயரில் எதையாவது சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!

கருத்துரையிடுக

0 கருத்துகள்