முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்லறம் - நூல் அறிமுகம்

என் பள்ளி ஆசிரியர் திரு. பாவை செ. சங்கர் தான் எழுதிய "நல்லறம்" என்ற நூலை ஒரு நிகழ்வில் எனக்குப் பரிசளித்தார். நேற்று இரவு ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அது குறித்த பதிவே இது.

"அறம்" என்ற சொல்லை வேறெந்த மொழியிலும் இதே பொருள் தரும்படி பெயர்க்க முடியாது. தர்மம் என்ற சொல் இதற்கு நிகரானது என்று சொல்வார்கள். என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. தமிழர்களின் வாழ்வில் அறம் எந்த அளவுக்கு இருந்தது என்பது ஒருபுறம். ஆனால், தமிழ் இலக்கியத்தில் அறம் என்பது அதிகம் பதிவு செய்யப்பட்ட அல்லது அதிகம் பேசப்பட்ட சொல். சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய இலக்கியம் வரை அறத்தைப் பேசுவதுதான் இலக்கியத்தின் நோக்கம்.

அறம் குறித்து சமணர்கள் தான் அதிகம் வலியுறுத்தினர். இல்லறம், துறவறம் என்று இரண்டாகப் பிரித்தனர். இதில் இல்லறம் என்பதிலேயே நல்லறம் அடங்கும் என்று சொல்லும் நூல் தான் இது. நான் முன்பு சொன்னதைப் போல் ஒன்றை மட்டும் அறம் என்று வகைப்படுத்தி விட முடியாது. பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும். அதனால், எல்லாவற்றையும் விளக்க முயலாமல் குறிப்பிட்ட ஆறு அறங்களை மட்டும் விரிவாகப் பேசுகிறது இந்நூல்.

கடைசியில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக அல்ல, பொருள் கருதி கடைசி கட்டுரையைத் தான் முதலில் வாசித்தேன். "நூலக அறிவு" என்னும் அந்தக் கட்டுரை வாசிப்பின் முக்கியத்துவத்தையும் நூல்களால் உயர்ந்த மனிதர்களைப் பற்றியும் பேசுகிறது. சீன அறிஞர் யுவான் சுவாங் தொடங்கி நம்மூர் எழுத்தாளர் சுஜாதா வரை வாசிப்பு குறித்து பேசிய, வலியுறுத்திய பெரும்பாலோனோர் பற்றி எழுதுகிறார். சரஸ்வதி மகால் உருவாக திருக்குறள் தான் காரணம் என்பதையும் அண்ணா, நேரு போன்றவர்களின் வாசிப்பு ஆர்வம் குறித்தும் சிறு சிறு சம்பவங்கள் மூலம் விளக்குகிறார் ஆசிரியர். எல்லார் வீட்டிலும் படுக்கையறை, சமையலறை, குளியலறை இருப்பது போல் ஏன் புத்தக அறை இருப்பதில்லை என்று ஆதங்கப்படுகிறார். குறைந்தது புத்தக அலமாரியாவது ஒதுக்குங்கள் என்கிறார்.

காலம், சினம், முயற்சி, நா காக்க, மதம் என்னும் மற்ற ஐந்து கட்டுரைகளிலும் இதே போல் விரிவாகப் பேசுகிறார். எல்லாக் கட்டுரைகளிலும் அதன் முக்கியத்துவம், பெருமை குறித்து பேசும் ஆசிரியர் மதம் என்ற தலைப்பில் மட்டும் மதத்தின் பெருமை பேசாமல் அதன் பெயரால் நடந்தேறும் சிறுமைகள் குறித்துப் பேசுகிறார். மதம் எப்படி மனிதர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் கடவுளைக் காப்பதில் மட்டும் கவனம் கொள்கிறது என்று பல வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் விளக்குகிறார்.

சில சுவாரசியமான தகவல்களும் இருக்கின்றன. ஜப்பானியர்கள் நேரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நமக்குத் தெரியும். எவ்வளவு? ஜப்பானில் ஒரு நொடி கூட தாமதமாக ரயில் வராது என்றுதானே நினைக்கிறீர்கள்? அது மட்டும் அல்ல. அவர்கள் எல்லாவற்றிலும் நேரத்தை மிச்சபடுத்தவே முயல்வார்கள் என்பதற்கு உதாரணம் தான் அவர்களின் தேசிய கீதம் வெறும் நான்கே அடிகள் கொண்டதாகவும், கவிதைகளை ஹைக்கூ என்று சில சொற்களில் அடக்கி விடுவதாகவும் இருக்கிறது.

வளையாபதி, மணிமேகலை, சிலப்பதிகாரம், பிரபுலிங்க லீலை, சித்தர் பாடல்கள், பாரதி, பாரதிதாசன் என்று பழைய இலக்கியங்களில் இருந்து ஏகப்பட்ட மேற்கோள்களைச் சுட்டுகிறார். முயற்சிக்கு எடுத்துக்காட்டாக எடிசன், ஹெலன் கெல்லர் போன்று பழையவர்களின் கதைகளை மட்டும் பேசாமல், சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் குறித்தும் நினைவு  படுத்துகிறார்.

ஒவ்வோர் கட்டுரைக்கும் ஏற்ற திருக்குறளோடு தொடங்கி இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.

இந்த நூலை எழுதியவர் ஓர் பள்ளி ஆசிரியர் என்பதால் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் தொனியிலேயே நூல் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், மற்றவர்களின் மேற்கோள்களும் வாழ்க்கைக் குறிப்புகளையும் மட்டுமே அடுக்கிச் செல்வதால் ஒவ்வொன்று குறித்தும் ஆசிரியரின் நிலைப்பாடு என்ன என்பது தெரிவதில்லை. இதையே இந்நூலின் குறை என்று நான் கருதுகிறேன். ஆனால், மாணவர்களுக்கு பெரிய அளவில் இது ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர் தன் சொந்த வாழ்வின் அனுபவங்களையும் சொல்லியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். என்றாலும், எழுத்து நடை மிகச் சரளமாக இருக்கிறது.


அறம் என்றால் நயன்தாரா நடித்த படம் என்று மட்டும் புரிந்து வைத்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு இந்நூல் அவசியம்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...