முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரைந்த நிஜம்!

கரைந்த நிழல் - குறும்படம் குறித்து.

சமீபகாலமாக குறும்படங்கள் பார்ப்பதைத் தவிர்த்து வந்தேன். காரணம் குறும்படம் என்ற பெயரில் ஒளிப்படங்களின் கோவையாக பின்னணி இசையுடன் வெறும் குப்பைகளை யூ-டியூப் போன்ற தளங்களில் கொட்டி வைத்திருக்கிறார்கள். மாநில, தேசிய, சர்வதேச விருதுகள் பெற்ற குறும்படங்கள் என்று தம்ப் நெயிலில் எழுதி இருக்கிறார்கள். அதை நம்பி உள்ளே சென்று பார்த்தால் அதற்கான எந்த அறிகுறியும் இருப்பது இல்லை. ஒரு குறும்படத்திற்கான வடிவ ஒழுங்கு இல்லாமல் இருக்கும் இவை எங்கு, எப்படி விருது பெற்றிருக்கும் என்பதை நினைத்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன்.

குறும்படம் என்பதை  சிறுகதையோடு ஒப்பிடலாம். நாவலுக்கும் சிறுகதைக்கும் இருக்கக் கூடிய மிக முக்கியமான வேறுபாடு என்பது உச்சகட்ட தருணங்களின் எண்ணிக்கை. நாவலில் பல உச்சகட்ட தருணங்கள் இருக்கும். ஆனால் சிறுகதையில் ஒரே ஒரு தருணம் தான் உச்சகட்ட தருணமாக இருக்கும். இதை அப்படியே குறும்படத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். குறும்படத்தில் ஒரே ஒரு உச்சகட்ட தருணம்தான் இருக்கும். அதை நோக்கியே அந்த குறும்படம் நகரும். ஆனால் பல ஆண்டு காலமாகவே குறும்படத்தின் இந்த இலக்கணத்தைத் திரைப்படம் கையாள்வது நம்முடைய சாபக்கேடு. பல உச்சகட்ட தருணங்களைத் தருவதற்கு பதிலாக ஒரே ஒரு உச்சகட்ட தருணத்தை நோக்கி மொத்தம் இரண்டரை மணி நேரமும் செல்லும்.

ஒரு சிறுகதையின் இறுதி வரியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் உத்தியை உலகெங்கும் பல எழுத்தாளர்கள் கையாண்டிருக்கிறார்கள். தமிழில் சுஜாதா அவர்கள் இதைப் பிரபலப்படுத்தினார். இதே உத்தியை குறும்படங்களிலும் பயன்படுத்துவதை நாம் காண முடியும். ஒரு குறும்படம் 5 லிருந்து 10 நிமிடங்கள் என்றால் அந்த பத்தாவது நிமிடத்தில் நமக்கு ஒரு அதிர்ச்சியோ ஆச்சரியமோ காத்திருக்கும். ஆனால் இது ஒன்றும் குறும்படத்திற்கான கட்டாய விதி அல்ல என்பதை புரிந்து கொண்டவர்கள் மட்டுமே சிறந்த குறும்படங்களை இயக்க முடியும்.

அந்த வகையில் நண்பர் சந்தோஷ் விஜய் அவர்கள் இயக்கிய 'கரைந்த நிழல்' என்ற குறும்படத்தைப் பார்க்கிறேன். சிறப்பான ஒலிப்பதிவு, நடிகர்களின் தேர்வு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் என்று பலவகைகளில் இது சிறப்பாகத் தெரிகிறது.

திரைக்கதையில் பெரிய மெனக்கெடல்கள் இல்லை என்றாலும் உணர்வுபூர்வமாக அது பாதிக்கவே செய்கிறது. இந்தக் குறும்படத்தின் இறுதியில் எந்தவித முடிச்சு அவிழ்ப்புகளும் இல்லை. சொல்லப்போனால் படம் தொடங்கும்போதே முடிவு என்னவாக இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. இந்தக் குறும்படத்தின் வெற்றியாக நான் காண்பது தரவேண்டிய அதிர்ச்சியை அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கதாபாத்திரங்களின் நடிப்பின் மூலமாக தந்துவிடுகிறது. குறிப்பாக படத்தின் மைய கதாபாத்திரமான ஆனந்தின் நடிப்பு.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்  ஆனந்தும் வயலினும். ஷெனாயும் வயலினையும் போல சோகத்தை உமிழும் இன்னொரு இசைக்கருவி இல்லை. அதை மிகச் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதன் பெரிய குறை அல்லது போதாமை என்று நான் கருதுவது கதை. கதையைவிட திரைக்கதையில் எந்தப் புதுமையும் இல்லை. ஒரு நாடக நடிகன் அல்லது திரைப்பட நடிகன் நடித்துக் கொண்டிருக்கும் போது அவன் எந்தக் காட்சியை நடிக்கிறானோ அது நிஜத்தில் நடப்பது போன்ற காட்சி அமைப்புகளைப் பல படங்களில் பார்த்து விட்டோம். குறிப்பாக அம்மா - மகன் உறவு. சொத்துக்காகத் தாய் தந்தையை உதாசீனம் செய்யும் மகன் பின்னர் வருந்துவது பார்த்துப் பார்த்துச் சலித்து போன கதை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல படமாக வந்திருக்க வேண்டிய வாய்ப்பு இருக்கிறது.

கரைந்த நிழல் என்ற தலைப்பு எவ்வளவு வசீகரமானது! எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.

தொடர்ந்து முயலுங்கள் சந்தோஷ். நிச்சயம் சிறப்பான படைப்பை உங்களால் தர முடியும். வாழ்த்துகள்.

சுட்டி:
https://youtu.be/Aj8qt1rnOwY

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...